articles

img

எல்லாம் தரும் - (கோவி.பால.முருகு)

 மண்ணெல்லாம் மரம்வளர்த்துப் பாரு-அதன் மழையாலே  செழித்திடுமே ஊரு!

கண்ணெல்லாம் பசுமையிலே குளிரும்-அந்தக்      

காட்சியிலே இயற்கையெழில் ஒளிரும்!  

காற்றுகூடத் தூய்மையாக வீசும்-

அதில் கரைந்துவிடும் கடுந்துன்ப மாசும்!

போற்றுகின்ற மண்வளமும் கூடும்-அதில்      

     பூக்கள்மிகு சோலைகளும் ஆடும்!  

மழையாலே கடல்வளமும் கூடும்-அது      

     மலையளவு செல்வங்கொண் டாடும்!

வழங்கிடுமே மீன்முத்து பவளம்-போக்கும்    

     வையத்தில் செல்வமில்லா அவலம்!  

ஆறுகுளம் ஏரியெலாம் காக்கும்-மரம்  

        அகலாமல்  மண்ணரிப்பைப் போக்கும்! கூறுகின்ற பொருளெல்லாம்  சிறக்கும்-மரம்            

கேடுற்றால் அனைத்துயிரும்  இறக்கும்!  மரம்தானே உரமாகும் நமக்கு-அதை    

  மறந்தாலே  நரகம்தான்  உயிர்க்கு! வரமாகும் வாழ்க்கைக்கு மரமே-அதை      

  வளர்த்தாலே எல்லாமும் தருமே!