மண்ணெல்லாம் மரம்வளர்த்துப் பாரு-அதன் மழையாலே செழித்திடுமே ஊரு!
கண்ணெல்லாம் பசுமையிலே குளிரும்-அந்தக்
காட்சியிலே இயற்கையெழில் ஒளிரும்!
காற்றுகூடத் தூய்மையாக வீசும்-
அதில் கரைந்துவிடும் கடுந்துன்ப மாசும்!
போற்றுகின்ற மண்வளமும் கூடும்-அதில்
பூக்கள்மிகு சோலைகளும் ஆடும்!
மழையாலே கடல்வளமும் கூடும்-அது
மலையளவு செல்வங்கொண் டாடும்!
வழங்கிடுமே மீன்முத்து பவளம்-போக்கும்
வையத்தில் செல்வமில்லா அவலம்!
ஆறுகுளம் ஏரியெலாம் காக்கும்-மரம்
அகலாமல் மண்ணரிப்பைப் போக்கும்! கூறுகின்ற பொருளெல்லாம் சிறக்கும்-மரம்
கேடுற்றால் அனைத்துயிரும் இறக்கும்! மரம்தானே உரமாகும் நமக்கு-அதை
மறந்தாலே நரகம்தான் உயிர்க்கு! வரமாகும் வாழ்க்கைக்கு மரமே-அதை
வளர்த்தாலே எல்லாமும் தருமே!